கனவில் கண்ட என் நாட்டில்...
களவு இல்லை கணம் கூட,
அங்கு
கோட்சேவே காந்தியானார்,
காந்தியோ கடவுளானார்...
கங்கை தமிழ்நாட்டில் கரை புரண்டு ஓடுகிறது,
காவிரி கல்கத்தாவில் காட்டாறாய் பாய்கிறது...
வஞ்சத்தை தேடினேன்,
மிஞ்சியது அலைச்சல் மட்டுமே...
நட்சத்திரமாய் இருந்த முன்னேற்றம்,
நகக்கண்ணாய் ஒட்டிவிட்டது-என் நாட்டுடன்.
தெய்வங்கள் பற்பல,
சாதியில்லை பேதமில்லை,
சம்பிரதாய சடங்கில்லை,
பசி என்ற சொல்லே கிடையாது,
பரதேசியை பார்க்க முடியாது,
பாமரனுக்கும் சிம்மாசனம்,
பாவிக்கும் பேரன்பு,
துரோகிக்கு மட்டும் தூக்கு தண்டனை,
வழக்குகள் தங்கா நீதிமன்றங்கள்,
வாய்ப்புகள் குறையா வேலைகள்,
பிறப்பில் தாழ்வில்லை பிரிவினை வாதமில்லை,
கட்சிகள் இரண்டு மட்டும், காட்சிக்கு அதிசயம் குறைவில்லை, 

எத்தனையோ கோவில்கள்,
அத்தனையும் பள்ளிக்கூடம்!
எத்தனையோ வியாபாரம்,
அத்தனையிலும் முன்னேற்றம்!
என் நாட்டில்
தினமும் மனிதர் புதியதாய் பிறக்கிறார்,
திறமை உள்ளோர் மட்டும் இருக்கிறார்...
மருத்துவத்திலும் முன்னேற்றம்,
வானத்திலே எழுதப்பட்டுள்ளது ,
இந்தியா வல்லரசு என்று...
போலிச்சாமி தொல்லையில்லை,
போர்கள் என்றச் சொற்களில்லை,
யாவுமே அமைதி எதிலுமே சமரசம்...
ரசிகர் மன்றம் ஒன்றில்லை,
ரகளை கலவரம் காணவில்லை,
ஏழை மட்டுமே அரசியல்வாதி,
மக்களாட்சியில் குறையில்லை,
கள்ள ஓட்டுக்கு ஆளில்லை,
முழுமையான வாக்குப் பதிவு- அதில்
முறையான மந்திரிசபை!
எனக்கும் கிடையாது,
உனக்கும் கிடையாது,
நமக்கு மட்டுமே எதுவும் உண்டு.
இரண்டே இனம்,
இன்பம் மட்டும் கொண்டதே...