Sunday, August 12, 2012

என் தேசம் உயர்ந்துவிடும்!


என் தேசம் உயர்ந்துவிடும் 
ஒவ்வொரு இளைஞனும் 
உழைக்க தொடங்கிவிட்டான் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

பகலில் பள்ளிக்கூடம் சென்று 
பாடப்புத்தகம் புரட்டுபவன் 
இரவில் எச்சில் இலை எடுத்து 
வியர்வை சிந்தி உழைக்கிறானே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

பெண்களை வர்ணித்தே பொழுதை போக்கியவன் 
இன்று சமுதாயத்தை எழுதுகிறானே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

பணத்தை மட்டும் தேடியவர்கள் 
இன்று படிக்கவும் சொல்கிறார்களே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

சினிமா நடிகனைப் பார்த்து 
என் தலைவன் வழி நடப்பேன் என்றவன்
சிறகை விரித்து சிந்தித்து 
விஞ்ஞானியை போல் வருவேன் என்றானே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

நண்பேன்டா...



மழையை கேட்டேன்
மண் என்றது...

மரத்தை கேட்டேன் 
காற்று என்றது... 

இரவைக்  கேட்டேன் 
நிலவு என்றது...

இலையைக் கேட்டேன் 
தண்டு என்றது... 

கடலைக்  கேட்டேன் 
அலை என்றது... 

கரும்பைக் கேட்டேன் 
இனிப்பு என்றது... 

அப்படி என்ன உங்களுக்குள் என்றேன்.,
"நட்பு" என்றன... 

ஆமாம், எங்களை கேட்கிறாயே 
உனக்கு யார் என்றன... 

உலகமே இருக்கிறது என்றேன்...

கருப்பு ராணி





அதோ குயில்...
கருப்பு ராணி!!!
குரலிலே போதை தரும்
 போதை பொருளே!
அபீனைப் போல என்ன
 இனிமை உன் குரல்! 
கஞ்ஜாவினை உறிஞ்சிய போது கூட
 நான் உணரவில்லை
 உன் குரல் போல் சுகத்தை...
நான் புகையைத்தான் உள்ளிழுத்து   
வெளிவிட்டேன் எனக்கு சிறு நிம்மதி... 
நீ காற்றை உள்ளிழுத்து 
கானமாக வெளிவிடுகிறாயே 
அதில் தான் உன் நிம்மதியோ?
எத்தனையோ பெண்களை
 போல் குரலினிலே
என்று வர்ணித்தேன்...
உன்னை வர்ணிக்க
 இன்று தான் எண்ணம் வந்தது. 
நான் கூட கருப்பு என்று
 ஏங்கிய நாட்கள் உண்டு...
உனக்கு அந்த தாழ்வு மனப்பான்மையே கிடையாதா???
ஆண்டவன் என்ன
 அரசு ஊழியன் ஆகிவிட்டானா? 
உன்னிடம் மட்டும் லஞ்சம் வாங்கி
 குரலை அழகாய் கொடுத்துவிட்டானே!
யாரிடம் பயிற்சி எடுத்தாய்?
உன் பாடசாலை எங்கு இருக்கிறது? 
ராகங்களை சமைத்தது நீதானா?
பாவி 
கேட்டு கேட்டு தொண்டை வற்றி 
என்னால் பேசவே முடியவில்லை., 

 நீ மட்டும் கூவிக்  கொண்டே இருக்கிறாயே?

ஓஹோ...

பதில் சொல்கிறாயா? 
மன்னித்து விடு...
என்னால் புலம்பத்தான் முடியும் 
புரிந்து கொள்ள முடியாது 
ஏன் என கேட்கிறாயா? 
ஆம்., 
நான் மனிதன்...